பட்டுக்கோட்டை நகரம், அண்ணா நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் பார்த்தா (எ) சதீஷ் (16). பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் பிரசாந்த் (22). இருவரும் நண்பர்கள்.
ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் சூரப்பள்ளம் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட, கொடுங்காயம் ஏற்படுத்தக்கூடிய சுமார் 3 அடி நீளமுள்ள வாளை கையில் உயர்த்திப் பிடித்தபடி அதிவேகத்தில் ஓட்டியவாறு அநாயசமாக சுற்றித் திரிந்துள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதனிடையே, அப்பகுதியில் ரோந்து சென்ற பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் இளைஞர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக், வாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.