தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே சொத்துத் தகராறில் முதியவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுக்கூரை அடுத்த வேப்பங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆர்.ஜெயராமன் (81). இவர் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வீட்டில் தனியாக வசித்து வந்த ஜெயராமனுக்கு குழந்தைகள் இல்லை.
ஜெயராமனின் அண்ணன் மகன் அதே ஊர் மேலத் தெருவைச் சேர்ந்த விவசாயி எம்.தமிழரசன். இவருக்கும் ஜெயராமனுக்கும் இடையே சொத்துப் பிரச்னை தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஜெயராமன் வீட்டுக்குச் சென்ற தமிழரசன் அவருடைய சொத்தை தனக்கு எழுதி தரும்படி வலியுறுத்தியுள்ளார். இதற்கு ஜெயராமன் மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன் அரிவாளால் ஜெயராமனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாராம். இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில், மதுக்கூர் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து தலைமறைவான தமிழரசனை தேடி வருகின்றனர்.