தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மீது மிளகாய் பொடி தூவி ரூ. 3 லட்சத்தை பறித்து சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாபநாசம் அருகேயுள்ள திருமண்டங்குடி கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில்
தஞ்சாவூரை சேர்ந்த ராஜசேகர் (48), மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கபிஸ்தலம் அருகேயுள்ள வடசருக்கை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் அரிச்சந்திரன்(43) மற்றும் பழனிசாமி ஆகியோர் விற்பனையாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (நவ.13) இரவு விற்பனைக்கு பின்னர் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு, மது விற்ற பணம் ரூ. 3 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அரிச்சந்திரன், பழனிசாமி ஆகிய இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் கபிஸ்தலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ராமானுஜபுரம் பிரதான சாலையில் சென்றபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அரிச்சந்திரன், பழனிசாமி வந்த வாகனத்தை வழிமறித்து, அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி அவர்களை கீழே தள்ளிவிட்டு இருசக்கர வாகன டேங்க் கவரில் வைத்திருந்த ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ராஜசேகர் அளித்த புகாரின்பேரில், கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து ரூ. 3 லட்சத்தை பறித்து சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.