கும்பகோணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெள்ளிக்கிழமை எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
கும்பகோணம் பொதிகை நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி செல்வி (40), இவர்களுக்கு மகள்கள் புவனேஸ்வரி (28), சுகந்தி (27), பவானி (24), திவ்யா (23), மகன் மணிகண்டன் (21) ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், புவனேஸ்வரிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், குடும்பத்தில் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கணவரிடம் செல்வி கோபித்துக் கொண்டு மகள்கள் மற்றும் மகனுடன் தனியாக ஜானகிராமன் தெருவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் குடியேறினார்.
மகள்கள், மகன் அனைவரும் தனியார் கடைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், புவனேஸ்வரி வெள்ளிக்கிழமை தனது தங்கை சுகந்திக்கு தொலைபேசியில் பேசி தனக்கு உடல் நிலை சரியில்லை என விரக்தியாகப் பேசினாராம்.
இதையடுத்து, வீட்டுக்குச் சென்ற சுகந்தி தனது தாயிடம் கூறினார். பின்னர், வெள்ளிக்கிழமை செல்வி, சுகந்தி, பவானி, திவ்யா, மணிகண்டன் ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, எலி மருந்தை சாப்பிட்டுள்ளனர். இதை அருகில் உள்ளவர்கள் அறிந்து 5 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.