சாஸ்த்ரா நிகர்நிலைப்பல்கலைக்கழகம் சார்பில் பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கஜா புயலால் பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட 250 பேர் மாவட்ட நிர்வாகத்தால் ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதையறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கே.வி. பாரதிதாசன் கேட்டுகொண்டதன்பேரில், சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பட்டுக்கோட்டை ஆலத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர். இதில் 750 பேருக்கு உணவும், வேஷ்டி, சேலை, துண்டு, போர்வையும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள 95 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இதில் சாஸ்த்ரா நிகர்நிலைப்பல்கலைகழக நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.