ஒரத்தநாடு அருகே மேலஉளூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை வீசிய கஜா புயலால் ஒரத்தநாடு வட்டம், மேலஉளூர் பகுதியில் ஆயிரக்கணக்கான தென்னை
மரங்கள் மற்றும் கரும்பு தோட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இதனால், தென்னை மற்றும் கரும்பு விவசாயிகள் பெருத்த சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் யாரும் வரவில்லை எனக் கூறி, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் திங்கள் கிழமை பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் சாலையில் மேலஉளூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து மறியல் நடைபெற்ற இடத்துக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் அதிகாரிகள் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.