கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை காந்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஜிர்ஜிஸ் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் எஸ்.டி.ஜெயகுமார், சேதுராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரியலூரில் நவம்பர் 25ஆம் தேதி நடைபெறும் கட்சியின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பாபநாசம் தெற்கு வட்டாரத்திலிருந்து கட்சியினர் அதிகளவில் பங்கேற்பது, புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் டெல்டா மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்களை இழந்துள்ள விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அய்யம்பேட்டை நகரத் தலைவர் ராஜாராமன் வரவேற்றார். நிறைவில் வட்டார பொதுச் செயலாளர் கலியமூர்த்தி நன்றி
கூறினார்.