தஞ்சாவூரில் மின்சாரம் கிடைக்காததால் அதிருப்தியடைந்த மக்கள் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியில் 5 நாள்களாக மின்சாரம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அலுவலர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மருத்துவக் கல்லூரி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.