புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறிய பிரதமர் மோடி, 2 லட்சம் இளைஞர்களுக்குக் கூட வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. மத்திய அரசு அலுவலகங்களில் 24 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நாடு முழுவதும் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து சிறு, குறு தொழில்களை நசுக்கி, இருக்கும் வேலையும் பறிபோகிற நிலை ஏற்பட்டுள்ளதால் இளைஞர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 83 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
தமிழகத்தை 7 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் அதிமுக அரசுப் புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமலும், 3 லட்சம் அரசுக் காலிப்பணியிடங்களை நிரப்பாமலும் உள்ளன.
எனவே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. செந்தில்குமார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி எஸ். கோவிந்தராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், சங்கத்தின் மாநில இணைச் செயலர் ஏ. ரவிச்சந்திரன், மாவட்டச் செயலர் கே. அருளரசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் ஜி. அரவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.