தஞ்சாவூர்

கொத்தடிமைத் தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு

DIN

தஞ்சாவூர் அருகே கொத்தடிமைத் தொழிலாளர்கள் 7 பேரை கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகேயுள்ள திருமலைச்சமுத்திரம் கிராமத்தில் கரி மூட்டம் போடும் தொழிலில் ஒரு குடும்பம் கொத்தடிமையாக வேலை செய்வதாக மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, கோட்டாட்சியர் சி. சுரேஷ் தலைமையில் சட்டப்பணிகள் ஆணைக் குழுவினர், தொழிலாளர் துறையினர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகினர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர், சைல்டு லைன் அமைப்பினர் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை காலை திருமலைச்சமுத்திரத்துக்குச் சென்று விசாரித்தனர். 
அப்போது, திருமலைச்சமுத்திரத்தில் தஞ்சாவூர் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமியிடம் ஒரு குடும்பம் மரங்களை வெட்டி, கரி தயாரிக்கும் தொழிலில் கொத்தடிமையாக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து, அத்தொழிலில் ஈடுபட்டிருந்த ராமன் (56), இவரது மனைவி பொம்மி (50), மகள் பாப்பாத்தி (30), மருமகன் வேலு (37), பேரக் குழந்தைகள் ஆனந்தி (11), ரம்யா (7), ஆனந்த் (6) ஆகியோரை குழுவினர் மீட்டனர்.
விசாரணையில் அந்தோணிசாமியிடம் ராமன் குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாகக் கொத்தடிமையாக வேலை செய்து வருவதும், அவர்களுக்கு வாரம் தலா ரூ. 500 மட்டும் கூலி கொடுக்கப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து வல்லம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதையடுத்து, மீட்கப்பட்ட 7 பேரும் தற்காலிகமாக சத்திர நிர்வாகத் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வீடு, குடும்ப அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், இவர்களுக்கு விடுதலைச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது. தவிர, ஆண்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், பெண்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் நிவாரணத் தொகையாக அரசு வழங்கும் என குழுவினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT