வங்கிகளை இணைப்பதைக் கண்டித்து தஞ்சாவூர் கீழ வீதியில் உள்ள பரோடா வங்கி முன் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விஜயா வங்கி, தேனா வங்கி, பரோடா வங்கி ஆகியவற்றை இணைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், இந்த மூன்று வங்கிகளையும் இப்போது உள்ளதுபோல தனித்தனியாக இயக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் கே. அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆர். சுப்பிரமணியன், கண்ணம்மா, கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.