சின்னசேலம், பூண்டியிலுள்ள பஜனை மடத்தில் தங்க இழையினாலான ஓவியங்களை திருடிய மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்.
சேலம் மாவட்டம், சின்னசேலம், பூண்டி பஜனை மடத்தில் தங்க இழையினாலான பழைமையான விலை உயர்ந்த இரண்டு நடராஜர் ஓவியங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு திருட்டு போனது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த ஓவியங்களை திருடியது தொடர்பாக திருக்கோவிலூர், தங்கம்பேட்டை, சங்கராபுரம் பிரதான சாலை வடக்குத் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆறுமுகம் (32) என்பவரை கடந்த 7 ஆம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆறுமுகத்தை கடந்த 17 ஆம் தேதி காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதையடுத்து, இவ்வழக்கில் தொடர்புடையதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேபட்டாம்பாக்கம், கக்கன் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துகிருஷ்ணன் (23) என்பவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முத்துகிருஷ்ணனை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட ஆறுமுகத்தை போலீஸார் புதன்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆறுமுகத்தை விசாரித்த நீதிபதி செப். 20 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து மேற்கண்ட இருவரையும் போலீஸார், திருச்சி மத்திய சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.