கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சுபாஷ் சந்திர கபூர் மீதான சிலை கடத்தல் வழக்கு அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் சரகம், சித்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயிலில் 20 சிலைகளும், ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோயிலில் 8 சிலைகளும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருட்டு போனது. இதேபோல, விருதுநகர் மாவட்டம், பழுவூர் சிவன் கோயிலில் கடந்த 2005 ஆம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது.
இந்த வழக்குகளில் தொடர்புடைய அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மேற்கண்ட 3 வழக்குகளும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸார் சிறையிலிருந்த சுபாஷ் சந்திர கபூரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து, இவ்வழக்கில் அப்ரூவராக மாறிய சித்தமல்லி வரதராஜபெருமாள் கோயில் குருக்கள் பிச்சுமணியிடம் எதிர்தரப்பு வழக்குரைஞர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அரைமணி நேரம் விசாரணை நடத்தினர். அப்ரூவரிடம் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, இந்த வழக்கை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.