தஞ்சாவூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை பேரணி நடத்தினர்.
சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்களுக்குப் பணிக்கொடையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு உணவூட்டு செலவு மானியத் தொகையை ரூ. 5 ஆக உயர்த்த வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சிவகங்கை பூங்கா அருகிலிருந்து தொடங்கிய இப்பேரணி அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலை, அண்ணாசிலை வழியாக பனகல் கட்டடம் முன் முடிவடைந்தது.
இப்பேரணிக்குச் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் எச். உமா தலைமை வகித்தார்.
மாநிலத் துணைத் தலைவர் ஜெ. சசிகலா, மாவட்டச் செயலர் தி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு ஊழியர் சங்க மாநிலச் செயலர் ஆர். பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் எஸ். கோவிந்தராசு, செயலர் ஏ. ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.