திருவையாறிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அரசுப் பேருந்து புறப்பட்டது. இதில் பயணம் செய்த தஞ்சாவூர் கொடிக்காலூரைச் சேர்ந்த சுதாகருக்கும்(30), பேருந்து ஓட்டுநரான கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த மகேந்திரனுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பேருந்திலிருந்து சுதாகர் இறக்கி விடப்பட்டார்.
இதையடுத்து, மாலையில் தஞ்சாவூரில் இருந்து திருவையாறு நோக்கிச் சென்று கொண்டிருந்த இப்பேருந்தை கோடியம்மன் கோயில் அருகே சுதாகர் உள்பட சிலர் வழிமறித்து நிறுத்தி, நடத்துநர் மகேந்திரன், ஓட்டுநர் நடராஜமூர்த்தி ஆகியோரைத் தாக்கினர். இதில், காயமடைந்த இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுதாகர், கொடிக்காலூரைச் சேர்ந்த ஆர். சுரேந்திரன் (29), சுங்கான்திடலைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (31) ஆகியோரைக் கைது செய்தனர்.