பேராவூரணியில் பேக்கரி உரிமையாளரை கடத்தி ரூ. 21 லட்சம் பறிப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி  நீலகண்டன் தெருவைச்  சேர்ந்தவர்  கே. லெட்சுமணன் (57).

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி  நீலகண்டன் தெருவைச்  சேர்ந்தவர்  கே. லெட்சுமணன் (57). பேக்கரி நடத்தி வருகிறார்.  கடந்த  ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஆம்னிவேன் லெட்சுமணனின் வாகனம் மீது மோதியது.
சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை வேனில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி வேனில் கடத்தி சென்றது. பின்னர், கடத்தல் கும்பல் கூறியபடி செல்லிடப்பேசியில் மனைவியை தொடர்பு கொண்ட லெட்சுமணன்,  விவரங்களை கூறி ரூ. 30 லட்சத்தை தயார் செய்து அனுப்புமாறு கூறினாராம். பல்வேறு இடங்களிலிருந்து ரூ. 20 லட்சத்து 80 ஆயிரத்தை திரட்டிய அவர் மனைவி,  கடை ஊழியரிடம் கொடுத்து  பட்டுக்கோட்டை அய்யா திருமண மண்டபம் அருகே வைத்துவிட்டு வருமாறு கூறியுள்ளார். கடத்தல் கும்பல் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு மன்னார்குடி அருகே லெட்சுமணனை இறக்கிவிட்டு விட்டு,  சம்பவம் குறித்து போலீஸாரிடம் கூறினால்,  அவரையும், அவர் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவோம் என கடுமையாக மிரட்டினார்களாம். இதையடுத்து, லெட்சுமணன் புகார் ஏதும் அளிக்காமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில்,  சம்பவம் தொடர்பாக அறிந்த தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி. செந்தில்குமார்,  தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.  கடத்தல் கும்பலை தனிப்படை போலீஸார் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீஸார் வெள்ளிக்கிழமை லெட்சுமணனிடம் புகார் பெற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com