வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை தஞ்சாவூர் மாவட்ட வாக்காள

தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநருமான வள்ளலார் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்த முகாம் தொடர்பாக நடைபெற்ற நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை பார்வையிட்ட தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார், அங்கிருந்த பொது மக்கள், பேருந்து பயணிகள், இளைஞர்கள், மாணவ மாணவிகளிடம் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை இணைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பின்னர், தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கணபதி நகர்,  பி.வி. செல்வராஜ் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், தஞ்சாவூர் வட்டம், காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஒரத்தநாடு வட்டம், நெய்வாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, ஆட்சியர் ஆ. அண்ணாதுரை முன்னிலையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வள்ளலார் பேசியதாவது:  தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும்  வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கடந்த 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், வாக்காளர் பட்டியல் பார்வையாளராகிய என்னிடம் தெரிவிக்கலாம் என்றார்.
கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது குறைகளை பார்வையாளரிடம் தெரிவித்தனர். இதனை விரைவில் நிவர்த்தி செய்து தருவதாக பார்வையாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப் குமார்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் (பொ) பி. காளிமுத்து, வட்டாட்சியர்கள் அருணகிரி (தஞ்சாவூர்), ரமேஷ் (ஒரத்தநாடு), தேர்தல் தனி வட்டாட்சியர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com