தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருள்மிகு பர்வதவர்த்தினி உடனுறை ராமலிங்க சுவாமி திருக்கோயிலில் மண்டலாபிஷேகம் புதன்கிழமை தொடங்கியது.
கீழை ராமேசுவரம், 108 சிவாலயம் என்று அழைக்கப்படும் பாபநாசம் ராமலிங்கசுவாமி திருக்கோயிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இக்கோயிலில் மண்டலாபிஷேகம் புதன்கிழமை தொடங்கியது. உபயதாரர்கள் சார்பில் அருள்மிகு பர்வதவர்த்தினி, ராமலிங்கசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜை நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயில் செயல் அலுவலர் க.சிவகுமார்,ஆய்வாளர் எம்.உமாராணி,கணக்கர் டி.முருகபாண்டி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் மண்டலாபிஷேக ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.