தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பட்டியில் தீப்பற்றியதில் 53 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்தன.
அம்மாபேட்டை காவல் சரகம், பூண்டி, எடவாக்குடி கிராமத்தை சேர்ந்த மேகவர்ணன் மகன் காளீஸ்வரன் (27). இவர் பூண்டி வடக்கு பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் மந்தை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இங்கு, பிறந்து 40 நாட்களேயான 53 செம்மறி ஆட்டுக் குட்டிகளையும் பராமரித்து வந்தார். புதன்கிழமை 53 ஆட்டுக் குட்டிகளையும் பட்டியில் அடைத்துவிட்டு, வழக்கம்போல் பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். இந்நிலையில், அந்தப் பகுதியில் தீடிரென தீப்பற்றியது. தீ வேகமாக பரவியதில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 53 ஆட்டுக் குட்டிகளும் தீயில் கருகி உயிரிழந்தன. உயிரிழந்த ஆட்டுக் குட்டிகளின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து காளீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.