தஞ்சாவூரில் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
சென்னை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (ஆய்வு 2) துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரியும் நிர்வாக அலுவலர் - நேர்முக உதவியாளர் நிலையில் உள்ள அரசு அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த இரண்டு நாள்கள் முன்னோடி பயிற்சி கடந்த 18, 19 ஆம் தேதிகளிலும், கண்காணிப்பாளர் நிலையிலான அலுவலர்களுக்கு அலுவலக நடைமுறைகள் குறித்த மூன்று நாள்கள் குறுகிய காலப் பயிற்சி பிப். 20- முதல் பிப். 22ஆம் தேதி வரையும் நடைபெற்றது.
முன்னதாக, இந்தப் பயிற்சியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடங்கி வைத்தார். இப்பயிற்சியை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் (ஆய்வு 3) துறையின் பிரிவு அலுவலர் ப. ஜெகதீஸ், உதவி பிரிவு அலுவலர் தெ. சண்முகசுந்தரம் மற்றும் பயிற்சியாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் அளித்தனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரா.முத்துமீனாட்சி, தஞ்சாவூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அ. கமலக்கண்ணன், துணை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கி. கஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.