கஜா புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை நிவாரணம் கிடைக்காமல் விடுபட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பிலான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கஜா புயலில் பாதிக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படாமல் விடுபட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்; அதேபோல் தமிழக அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அறிவித்துள்ள ரூ.2,000 உதவித்தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. எனவே, அரசு உடனடியாக முறையான கணக்கெடுப்பு நடத்தி ஏழை மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி ரூ.2,000 வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் மார்ச் 1ஆம் தேதி பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர் கே. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலர் எஸ். கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கே. சோமசுந்தரம், ஆர்.எஸ். வீரப்பன், கு. பெஞ்சமின், ஆர். ஜீவானந்தம், டி.சரோஜா, மகேஸ்வரி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.