தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவ நெல் கொள்முதலுக்காக 267 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் நிகழ் சம்பா, தாளடி பருவத்தில் நெல் அறுவடை பணி தொடங்கிய கிராமங்களில் நெல் கொள்முதல் மேற்கொள்வதற்காக இதுவரை 267 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் வட்டத்தில் 29 இடங்களிலும், பூதலூர் வட்டத்தில் 7 இடங்களிலும், திருவையாறு வட்டத்தில் 10 இடங்களிலும், ஒரத்தநாடு வட்டத்தில் 76 இடங்களிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 17 இடங்களிலும், பேராவூரணி வட்டத்தில் 9 இடங்களிலும், பாபநாசம் வட்டத்தில் 45 இடங்களிலும், கும்பகோணம் வட்டத்தில் 41 இடங்களிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் 33 இடங்களிலும் இதுவரை நேரடி நெல்
கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் அறுவடை செய்யும் சம்பா, தாளடி நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறலாம்.