ஒரத்தநாடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் திங்கள்கிழமை அதிகாலை தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது.
தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமியின் மனைவி அமுதா (56). இவர் ஜன. 11ஆம் தேதி ஒரத்தநாடு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்தக் காயமடைந்தார். மிகவும் பாதிக்கப்பட்டு, சுயநினைவு இழந்த நிலையில் இருந்த இவர் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடியும் ஞாயிற்றுக்கிழமை மூளைச் சாவு அடைந்தது. இவரது உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் சம்மதித்தனர். இதன்பேரில், மீனாட்சி மருத்துவமனையில் சிறப்புக் குழுவினர் அமுதாவின் இரு சிறுநீரகங்கள், இரு கண்களை அறுவை சிகிச்சை மூலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அகற்றினர்.
இவற்றில் ஒரு சிறுநீரகம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. மற்றொன்று தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் உள்ள மற்றொரு நோயாளிக்குப் பொருத்தப்படுகிறது. இரு கண்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த உறுப்பு தானத்தின் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர் என்றனர் மருத்துவர்கள்.