கும்பகோணத்தில் தீயில் சிக்கிக் கொண்ட மகளும், அவரைக் காப்பாற்ற முயன்ற தாயும் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
கும்பகோணம் காசிராமன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், திரையரங்கத் தொழிலாளி. இவரது மனைவி லதா(30). இவர்களது மகள் நிவேதா (13) எட்டாம் வகுப்பு மாணவி. மகன் ஹரிஹரன் (12) ஏழாம் வகுப்பு மாணவர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு லதா கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தபோது, விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த நிவேதா மீது தீ பரவியது. இதை லதா அணைக்க முயன்றதில் இருவரும் பலத்தக் காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர். சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.