ஆட்சியரகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்புப் போராட்டம்
வெண்டையம்பட்டி ஊராட்சியில் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூர் ஆட்சியரகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பூதலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்டையம்பட்டி ஊராட்சியில் அரசுப் பணத்தைக் கூட்டு சதி செய்து முறைகேடு செய்ததாகக் கூறி, தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ. பாரதி தலைமை வகித்தார். தேசியக் குழு உறுப்பினர் கோ. பழனிசாமி, மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா. திருஞானம், சி. பக்கிரிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
மாவட்டத் துணைச் செயலர்கள் வீ. கல்யாணசுந்தரம், பி. காசிநாதன், பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், பூதலூர் ஒன்றியச் செயலர் ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்றவர்களை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பிற்பகலில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார். இதையடுத்து, பிற்பகல் 2.20 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.