தஞ்சாவூர் அருகே புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், நிவாரணம் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அருகேயுள்ள துறையூர் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அம்பலக்காரத்தெரு, ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தாலுகா போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.