பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கிராம உதவியாளர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி திங்கள்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் அ.கா. தங்கராசு பேசியது: கஜா புயலின்போது நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த, வருவாய் கிராம ஊழியர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டனர். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.
மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்தவர்களையே மிரட்டியது கண்டிக்கத்தக்கது என்றார்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.பி. மாரிமுத்து, மாநில பொதுச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வம், மாநில துணைத் தலைவர் ஏ.சி.வின்சென்ட், மாநில அமைப்புச் செயலாளர் வி.நல்லதம்பி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பி.பார்த்தசாரதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.