ஒரத்தநாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பூட்டியே கிடப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இதுதொடர்பாக ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவோணம் வட்டார விவசாய நலச் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வி.கே. சின்னதுரை திங்கள்கிழமை ஆட்சியர் ஆ. அண்ணாதுரையிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஒரத்தநாடு வட்டம், காவாளிப்பட்டி வருவாய் சரகம், பணிகொண்டான்விடுதி, மற்றும் காடுவெட்டிவிடுதி (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் நடராசன் என்பவர் கடந்த சில மாதங்களாக பணிபுரியும் வார நாள்களாக முழுமையாக பணிக்கு வராததால் அதன் அலுவலகம் பூட்டிய நிலையிலேயே உள்ளது.
இதனால், இரண்டு கிராம விவசாயிகளும் மற்றும் பொதுமக்களும் தேவையான சான்றுகள், பட்டா மாறுதல் உள்ளிட்டவை பெறமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த பிரச்னையில் ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.