வேலைக்குச் செல்லாததைக் கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜா (30), இவரது மனைவி சுமதி (25). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். ராஜா வேலைக்குச் செல்லாமல் குடித்து வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார். மேலும், தஞ்சாவூர் மாவட்டம், காசநாடு கோவிலூரிலுள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சுமதி தங்கியிருந்தார்.
இந்த நிலையில், காசநாடு கோவிலூருக்கு வந்த ராஜா, அங்கும் வேலை செய்யாமல் சுற்றி வந்துள்ளார். இதனால் சுமதி கணவரைக் கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு சனிக்கிழமை காலை வெளியே சென்ற ராஜா, மாமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கள்ளபெரம்பூர் காவல் உதவி ஆய்வாளர் மகாதேவன் மற்றும் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று, ராஜாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.