திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளை பாசன வாய்க்காலில் சர்க்கரை ஆலையின் கழிவு நீர் கலந்ததால் விவசாயம் செய்த பயிர்கள் பாதிக்கப்படுமென அப் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
முக்கொம்பு காவிரி ஆற்றிலிருந்து பாசனத்திற்காக பெருவளை வாய்க்கால் உற்பத்தி ஆகிறது. இந்த வாய்க்கால் சமயபுரம் வழியாக பெருவளநல்லூர், புஞ்சைசங்கேந்தி வரை பாசன வாய்க்காலாக வந்து பின்னர்அப் பகுதியில் உள்ள ஏரியில் கலக்கிறது.
இந்த பாசன வாயக்காலில் வந்த தண்ணீர் வழக்கத்திற்கு மாறாக கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்தது. குறிப்பாக பெருவளநல்லூர் கிராமத்திற்கு பிறகு வரும் தண்ணீரில் தான் இதுபோன்ற தண்ணீர் வந்துள்ளது.
இதனை அறிந்த புஞ்சைசங்கேந்தி, இ. வெள்ளனூர் உள்ளிட்ட விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து, அப் பகுதியில் சர்க்கரை ஆலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லாரிகளை வழிமறித்தனர். அப் பகுதி விவசாயிகள் லாரி ஓட்டுநரிடம் பிரச்சினையில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த லால்குடி போலீஸார் , மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் சமரசம் செய்தனர். மேலும் கழிவு நீர் கலந்த தண்ணீரை வடிகாலாக நத்தியாற்றில் திறந்து விட்டனர். இதனை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.