திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கணணி பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள ஆர்.எஸ்.வையம்பட்டியில் உள்ளது அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சனிக்கிழமை அலுவலக நேரம் முடிந்து பள்ளி மூடப்பட்ட நிலையில், திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளியின் கூட்ட அரங்கில் இருந்த கணிப்பொறி, இன்டர்நெட் மோடம், புரஜெக்டர் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்துள்ள புகாரில் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான கணணி தொடர்பான பொருள்கள் திருட்டுபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக வையம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.