துறையூர் அருகே இரு சக்கர வாகனம் மீது ஜேசிபி வாகனம் மோதியதில் தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே புத்தனாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு கணினி அறிவியல் படிக்கும் கண்ணனூர் குமார் மகன் விமல்ராஜ்(18), நல்லவன்னிப்பட்டி தர்மராஜ் மகன் நந்தகுமார்(19), கரட்டாம்பட்டி சரவணன் மகன் விஜய்(19) ஆகியோர் திங்கள்கிழமை காலை தேர்வெழுதி விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். புத்தனாம்பட்டி-கரட்டாம்பட்டி சாலையில் இலுப்பையூர் அருகே சென்ற போது சாலை செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த விமல்ராஜ், நந்தகுமார் ஆகியோர் நிகழ்விடத்தில் இறந்தனர். காயமடைந்த விஜய் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புலிவலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஜேசிபி வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.