மணப்பாறை அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் வீடு, பொருள்கள் முற்றிலும் எரிந்து போனது.
மணப்பாறை காந்திநகர் விரிவாக்கப் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி மனைவி சுசிலா. இவர் கோவையில் கூலி வேலைக்காக சென்றிருந்த நிலையில், சகோதரர் கணேசன், மகன் செல்வராஜ் மட்டும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.
நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், குடிசை வீடு முற்றிலும் எரிந்ததோடு, வீட்டினுள் இருந்த பொருள்கள் முழுவதும் எரிந்து போனது. மேலும், வீட்டினுள் கட்டி போடப்பட்டிருந்த மூன்று மாத நாய்க் குட்டி தீயில் கருகி உயிரிழந்தது. தீவிபத்துக்கான காரணம் குறித்து மணப்பாறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.