குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வை காவல்துறை தொடர்ந்து ஏற்படுத்தும் என்றார் திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் ( சட்டம் மற்றும் ஒழுங்கு) என்.எஸ். நிஷா.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி- சைல்டுலைன் நோடல் ஏஜென்சி சார்பில் குழந்தைகள் தின விழாவையொட்டி, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சைல்டுலைனுக்கு நண்பர்களை உருவாக்குதல் என்ற நிகழ்ச்சியை புதன்கிழமை நடத்தியது.
இதையொட்டி திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியிலுள்ல மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் மாணவ, மாணவிகள் மாநகரக் காவல் ஆணையர் முனைவர் அமல்ராஜ், துணை ஆணையர் (சட்டம் மற்றும்) என்.எஸ். நிஷா ஆகியோரைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் சைல்டுலைனுக்கு நண்பர்களை உருவாக்குதல் குறித்த சுவரொட்டியை அறிமுகப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் மத்தியில் காவல் துணை ஆணையர் பேசியது: காவல்துறை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் தொடர்ந்து ஏற்படுத்தும். என்றார் அவர்.
இந்த நிகழ்வில், சைல்டுலைன் நோடல் ஏஜென்சி இயக்குநர் ஜெ. காட்வின் பிரேம்சிங், குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபு, நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் கபிலன், காவல் ஆய்வாளர் கணபதி, ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் மீராபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபோல, சோமரசம்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், சைல்டுலைன் அமைப்பின் எஸ்.தியாகராஜன் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு சம்பவங்கள், அதிலிருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து பேசினார்.