பிடித்த வரனுக்கு ஜாதகம் சரியில்லையே என்ற விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்லமுத்து-நல்லம்மாள் தம்பதியர். இவர்களது மகள் நிவேதா (22). பட்டயப் படிப்பு முடித்து விட்டு திருமணத்துக்காக காத்திருந்தார். செல்லமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் நிவேதாவுக்கு வரன் பார்த்ததில் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அனைவருக்கும் பிடித்துப்போயிருந்தது.
இதனையடுத்து அடுத்தக்கட்டமாக ஜாதகம் பார்த்தபோது, ஜாதகத்தில் இருவருக்கும் பொருத்தமில்லை என தெரியவந்தது. எனவே இந்த வரன் வேண்டாமென உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் நிவேதாவுக்கு அந்த வரன் பிடித்து விட்டதாகவும், அவரையே திருமணம் செய்யவேண்டும் என கூறி வந்துள்ளார்.
ஆனால் நல்லம்மாள் மற்றும் உறவினர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் விரக்தியிலிருந்த நிவேதா புதன்கிழமை வீட்டில் யாருமில்லாத நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து துவாக்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.