திருச்சி மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக மொத்தமாக 677.30 மி. மீ. மழை பதிவாகியுள்ளது.
கஜா புயல் காரணமாக வியாழக்கிழமை இரவில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை பின்னர் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் பெய்த மழை தொடர்ந்து முற்பகல் 11 மணி வரை நீடித்தது. அதன்பிறகு படிப்படியாக மழை நின்றது. இதனால் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.
கே.கேநகர், உறையூர், காஜாமலை பயணியர் மாளிகை, சமயபுரம்- மண்ணச்சநல்லூர் சாலை, வாளாடி- லால்குடி சாலை, மணப்பாறை- குளித்தலை சாலை, மணப்பாறை- கோவில்பட்டி சாலை, ரயில்வே மேம்பாலம், மணப்பாறை- திருச்சி சாலை போன்ற பகுதிகளில் புயலால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை காலை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதம், சீரமைப்புப்பணிகளை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலைய இயக்குநரும் முதன்மைச் செயலருமான கே.பனீந்திரரெட்டி திருச்சியில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.
மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் : மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மழை அளவு விவரம் ( மி.மீட்டரில்): நவலூர் குட்டப்பட்டு- 45 மி.மீ, திருச்சி டவுன்- 42, புள்ளம்பாடி- 40.60, கல்லக்குடி- 40.20, சமயபுரம்- 39, திருச்சி ஜங்சன்- 38.60, துவாக்குடி நீர்ப்பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம்- 38.20, லால்குடி- 35, பொன்மலை- 34.50, நந்தியாற்றுத்தலைப்பு- 33.40, பொன்னணியாறு அணை- 31.20, வாய்த்தலை அணைக்கட்டு- 31, திருச்சி விமான நிலையம்- 29.80, மணப்பாறை- 29.40, துறையூர்- 29, கொப்பம்பட்டி-26, தேவிமங்கலம்- 25, மருங்காபுரி- 22.20, முசிறி-17, புலிவலம்- 15, கோவில்பட்டி-13.20, தென்பறநாடு- 10, சிறுகுடி- 9, தாத்தையங்கார்பேட்டை- 4 மி.மீ.
மாவட்டத்தில் சராசரியாக 27.09 மி.மீ. மழையும், மொத்தமாக 677.30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.