கஜா புயல் காரணமாக திருவானைக்கா பகுதியில் வாழை சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி, வெள்ளிக்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவானைக்கா மேலக்கொண்டையம்பேட்டை வடக்கு தெருவில் வசிப்பவர் நடராஜன் மகன் செல்வராஜ் (30). இவருக்கு சரண்யா என்ற மனைவி, தனுஷ்கா(2) என்ற பெண் குழந்தையும் இருந்த நிலையில், திம்மராய சமுத்திரம் பகுதியில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கடந்த ஜூன் மாதத்தில் வாழை பயிர் செய்திருந்தார். இந்நிலையில், கஜா புயலால் இவரது வயலில் பயிரிடப்பட்டிருந்த வாழை அனைத்தும் நாசமடைந்தது. இதனால் மனமுடைந்த செல்வராஜ், வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் கஜா புயலால் ஏற்பட்ட வாழை நட்டம், கடனை அடைப்பது குறித்தும் தனது நண்பர்கள் மற்றும் மனைவியுடன் புலம்பியுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த அவர், வீட்டின் அருகே வசிக்கும் சதானந்தம், பாஸ்கர், வீரா ஆகியோருக்கு செல்பேசி மூலம் தான் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும், திருவானைக்கா ரயில்வே மேம்பாலம் ரயில் தண்டவாளத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு அவரது நண்பர்கள் வருவதையறிந்த செல்வராஜ், அருகிலிருந்த புதருக்குள் மறைந்து கொண்டார். அப்போது, திருச்சி நோக்கி வந்த ராமேசுவரம் ரயில் முன் திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.