திருச்சி மாநகர் மாவட்டத்தில் புதிதாக சுமார் 1.25 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் மக்களவை உறுப்பினரும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான ப. குமார்.
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் புதிய உறுப்பினர்களுக்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழை நடைபெற்றது. அதில், பங்கேற்று புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி எம்.பி.குமார் கூறுகையில், கட்சித் தலைமை அறிவிப்பிற்கிணங்க அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. இது வரையில் சுமார் 1.25 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அறிவித்தபடி புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்கும் நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஜனவரியில் அது தொடர்பாக நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியின்போது, வழக்குரைஞர் ராஜ்குமார், அருள்ஜோதி, அய்யப்பன், பத்மநாதன், பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.