செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும் இடைநிலை,மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகளுக்கான மண்டலத்துறை துணை இயக்குநர் கா.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இடைநிலைக் கல்வி(எஸ்.எஸ்.எல்.சி) மேல்நிலைக்கல்வி முதலாமாண்டு (பிளஸ் -1) மற்றும் இரண்டாம் ஆண்டு (பிளஸ்-2)பொதுத்தேர்வு எழுதி தோல்வியுறும் மாணவர்களுக்கு (தனித் தேர்வர்கள்) செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும் துணைத்தேர்வை ரத்து செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறைப்படி மார்ச்,ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் பருவத் தேர்வை பள்ளியிலும், தனித்தேர்வராகவும் எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும் ஜூன், ஜூலை சிறப்பு உடனடி தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இக்குறிப்பிட்ட அரசாணையின்படி செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜூன், ஜூலை 2019 முதல் மார்ச் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும் விண்ணப்பித்து பயன் பெறலாம். அதே போல ஜூன், ஜூலை மாதத்தில் நடத்தப்படும் இடைநிலைக்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு உடனடி சிறப்புத் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தும் தேர்வு எழுதலாம் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.