திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புயல் பாதிப்பு பகுதிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வரவில்லை, மின் இணைப்பு, குடிநீர் கூட கிடைக்கவில்லை எனக்கூறி திங்கட்கிழமை கோவில்பட்டி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட 12, 13, 14 மற்றும் 15 ஆகிய வார்களில் உள்ள பொதுமக்கள் புயல் சீரமைப்பு பணியில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி பொறியாளர் மனோகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.
இதேபோல் மணப்பாறை காமராசர் சிலை, மதுரை ரோடு, ஜெஜெ நகர், சொக்கலிங்கபுரம், பாரதியார் நகர், ரெட்டியப்பட்டி, மஸ்தான் தெரு ஆகிய பகுதிகளிலும் மின் இணைப்புகள், குடிநீர் கிடைக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புயல் முடிந்து 4 நாட்கள் ஆகியும் மணப்பாறை நகர்ப் பகுதியிலேயே 30 சதவீதம் மட்டுமே மின் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் மணப்பாறை பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் முழுமையடையாததற்கு சரியான திட்டம் இல்லாததே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கிராமப் புறங்களில் மின் விநியோகம் கிடைக்க குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் எனத் தெரிகிறது.