"சபரிமலையில் பக்தர்கள் மீது தொடரும் மனித உரிமை மீறல்கள்'
சபரிமலையில் பக்தர்கள் மீது கேரள அரசின் மனித உரிமை மீறல்கள் தொடருகிறது. இதை கண்டித்து திருச்சியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊடக த்துறை மாநிலப் பொறுப்பாளர் கிருஷ்ண. முத்துசாமி.
திருச்சியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மீது கேரள அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. பக்தர்கள் சுமந்துவரும் இருமுடிகளை பூட்ஸ் காலால் போலீஸார் எட்டி உதைக்கின்றனர். சன்னிதானத்தில்பக்தர்கள் யாரும் இரவில் தங்கக்கூடாது எனத் தெரிவிக்கின்றனர்.
குடிநீர், உணவு, கழிப்பிட போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் கோயில் தேவஸ்தானம் செய்து தருவதில்லை. சரண கோஷம் போடக்கூடாது, சுவாமிக்கு நடைபெறும் நெய் அபிஷேகத்தை பார்க்கக்கூடாது எனவும் அரசு கூறி வருகிறது. இதுவரை 170 பக்தர்களை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் கேரள அரசை கண்டித்து, அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே புதன்கிழமை (நவ.21) ஆர்ப்பாட்டம் ஆர்.எஸ்.எஸ். மண்டலச் செயலர் கு.செல்வம் தலைமையில் நடைபெறுகிறது என்றார் அவர்.