மணப்பாறை அருகே வீடுகளின் முன்பு நகராட்சியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுற்றுச்சுவர் நீதிமன்ற உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்டது.
மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் சின்னத்தம்பி, வேளாங்கண்ணி. இவர்கள் வீட்டின் அருகில் நகராட்சிக்குச் சொந்தமாக 30,000 லிட்டர் கொள்ளவவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீர்தேக்கத் தொட்டியைச் சுற்றி நகராட்சி நிர்வாகம் சுர்றுச்சுவர் எழுப்பியது. தங்கள் குடியிருப்புகளை மறைத்து நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி, மணப்பாறை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சின்னத்தம்பி, வேளாங்கண்ணி வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.கலையரசி, ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவரை இடிக்க உத்தரவிட்டார். இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்ற ஆணை நிறைவேற்றும் அலுவலர் பி. முருகேசன் முன்னிலையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் சுற்றுச்சுவர் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.