திருச்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் சடலம் தார்பாயில் மூட்டையாக கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறையூர் பணிக்கன் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் (45). இவருக்கு மனைவி லலிதா, மகன் தானேஷ்(13) ஆகியோர் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான இவர் வியாழக்கிழமை காலை வழக்கம்போல ஆட்டோவை எடுத்துக் கொண்டு சென்றவர், மாலை வரை வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில், உறையூர் ராமலிங்கநகர் மேற்கு விரிவாக்கம் 3ஆவது தெருவில் ஒதுக்குப்புறமாக முட்புதர் அதிகமுள்ள பகுதியில் கேட்பாரற்று ஆட்டோ நிற்பதாக உறையூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது, நிறுத்தப்பட்டிருந்தது துரைராஜின் ஆட்டோ என்பது தெரியவந்தது.
மேலும், ஆட்டோவின் பின்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் தார்பாய் மூட்டையை பிரித்தபோது, அதில் துரைராஜ் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் 10-க்கும் மேற்பட்ட கத்திக் குத்து காயங்கள் இருந்தன. மேலும், சாக்கு மூட்டையிலும், ஆட்டோவுக்குள்ளும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. போலீஸாரின் மோப்பநாயால் எதுவும் கண்டுபிடிக்க முடியாது என்பதற்காக துரைராஜை கொலை செய்த கும்பல், சடலத்தை மூட்டை கட்டி வைத்து மிளகாய் பொடி தூவிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
தகவலறிந்து மாநகரக் காவல் துணை ஆணையர் நிஷா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஆட்டோ தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா, நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலா, குடும்பத் தகராறு காரணமாக நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.