திருச்சி மாநகரை அழகுபடுத்தும் வகையில் ரூ.14.21 கோடியில் 16 புதிய பூங்காக்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், 5 இடங்களில் ரூ.1.47 கோடி மதிப்பில் ஒளிரும் நீரூற்றுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பூங்காக்களை மாநகரின் 4 கோட்டங்களிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, லூர்துசாமி பூங்கா, உறையூர் ஹவுசிங் யூனிட், காந்திநகர், திரவியம் பிள்ளை பூங்கா, பாபு ரோடு, மூவேந்தர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், கார்த்திகேயன் கார்டன், வோதாந்திரி நகர், மகாலட்சுமி நகர், ஆண்டாள் நகர், பர்மா காலனி, சோழன் நகர், பெரியார் நகர், தங்கையா நகர், பீமநகர் மேஜர் சரவணன் பூங்கா ஆகிய 16 பூங்காக்கள் புதிதாக கட்டப்படவுள்ளன.
இதில், நடைபயிற்சிக்கான நடைபாதை தளம், அமரும் இடங்கள், சிறுவர் விளையாட்டு உபரணங்கள், அழகிய விளக்குகள், வன விலங்குகளின் சிலைகள், கழிவறைகள், கண்ணைக் கவரும் செடிகள், மலர்கள் இடம்பெறவுள்ளன. இதேபோல, திருவானைக்கா டிரங் சாலை, சத்திரம் பேருந்துநிலையம் காமராஜர் சிலை ரவுண்டானா, பாரதிதாசன் ரவுண்டானா, எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, மத்திய பேருந்துநிலையம் காமராஜர் சிலை ரவுண்டானா ஆகிய 5 இடங்களில் செயற்கை நீரூற்றுகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த நீரூற்றுகளில் மாலை நேரத்தில் வண்ண, வண்ண ஒளிவிளக்குகளை ஒளிரச் செய்து பார்வையாளர்களை பரவசப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்படவுள்ளது. இவற்றுக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.