லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி துவாக்குடி பகுதியில் வாகனத் தணிக்கை செய்யும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், லாரி ஒட்டுநர்களிடம் லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்தன.
இந்நிலையில் ஓட்டுநர் ஒருவரின் உரிமத்தை காவலர் ஒருவர் வாங்கி வைத்துக் கொண்டு, ரூ.1000 லஞ்சம் தந்தால் மட்டுமே உரிமம் திருப்பித் தரப்படும் என மிரட்டல் விடுப்பதும், பின்னர் ஓட்டுநர் பணம் கொடுத்துவிட்டு உரிமத்தை பெற்றுச் செல்வதுமான விடியோ காட்சி திங்கள்கிழமை வெளியானது. இதையடுத்து மாவட்டக் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சீராளன் என்பது தெரியவந்தது. இதையடுத்து திங்கள்கிழமை இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றப்பட்ட சீராளன், பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.