திருச்சி மாவட்டம், மணப்பாறையில் முறையாகக் காவிரிக் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி நகராட்சி அலுவலகத்தை பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டு பூமாலைப்பட்டி பகுதிக்கு கடந்த சில மாதங்களாக முறையான காவிரி குடிநீர் விநியோகம் இல்லையாம். வாரத்திற்கு 2 முறை மட்டுமே வரும் குடிநீரையும் சிலர் மின்மோட்டாரால் உறிஞ்சுவதால் கடைசி பகுதியில் உள்ளோருக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறி கடந்த மாதம் போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் புதன்கிழமை காலை மீண்டும் மணப்பாறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த நகராட்சி பொறியாளர் மனோகரன் 15 நாட்களில் குடிநீர் விநியோகம் சீரமைக்கப்படும், மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். கோரிக்கை நிறைவேறாவிட்டால் சாலை மறியல் செய்யப்போவதாக பெண்கள் தெரிவித்தனர்.