முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நிறைவேற முடியாமல் உள்ள நிலையில், முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு மத்திய அமைச்சரவையும் அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். மத்திய அரசின் இந்த செயல்பாட்டைக் கண்டித்து திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தகீர் தலைமை வகித்தார். கோவை ஆர்.ரகமத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட நிர்வாகிகள் சையது ஜாஹீர், காஜா முகைதீன்,சமயபுரம் உமர், ஷாஹூன், ஜூபேர்உள்ளிட்டோர் பங்கேற்றனர். சையது ஹாஹீர் நன்றி கூறினார்.