உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர்வரத்து அதிகளவில் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை இரவு குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
பேட்டைவாய்த்தலையில் காவிரியில் இருந்து பிரியும் உய்யக்கொண்டான் வாய்க்கால் திருச்சிக்குள் நுழைந்து திருவெறும்பூர் வழியாக தஞ்சை மாவட்டம் செல்கிறது. பாசனத்துக்காக உய்யக்கொண்டான் வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை இரவு அதிகரித்ததால், அரியமங்கலம் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். பொருள்களை அப்புறப்படுத்திய மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
முன்னறிவிப்பு இல்லாமல் உய்யக்கொண்டான் வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதிப்புக்குள்ளான தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.