திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் பாலம் மதகுகள் உடைந்ததால், மூடப்பட்டிருந்த முக்கொம்பு பூங்கா ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
முக்கொம்பு மேலணை கொள்ளிடம் பாலம், 9 மதகுகள் கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு இடிந்து விழுந்தது.
இதையடுத்து அப்பகுதியில் தற்காலிக சீரமைப்புப்ப பணிகள் நடைபெற்று வந்த நிலையில், முக்கொம்பு சுற்றுலா மையத்தின் முன்பகுதியிலுள்ள பூங்காவைப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலணையில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பூங்கா திறக்கப்பட்ட தகவலையறிந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் முக்கொம்பில் குவியத் தொடங்கினர். அங்குள்ள ராட்டினங்கள், விளையாட்டுச் சாதனங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.
கொள்ளிடம் பாலத்துக்குச் செல்ல அனுமதி மறுப்பு: முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் பாலத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிடச் சென்று அங்கு செல்பி எடுக்க முயற்சி செய்வார்கள் என்பதால், காவிரிப் பாலத்தை தாண்டி பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.