திருச்சியில் நடைபெற்று வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுழற்கோப்பைக்கான வாலிபால் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் விளையாட திருச்சி கல்லூரி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி வைரவிழா ஆண்டையொட்டி, மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையே 9ஆவது வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. 8 கல்லூரிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
திண்டுக்கல் காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை 25-17,25-20 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை லயோலா கல்லூரியும், ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியை 25-15, 25-19 புள்ளிக்கணக்கில் ஜமால் முகமது கல்லூரி ஏ அணியும் வென்றன.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி பி அணியை 25-19, 25-27, 25-18 புள்ளிக்கணக்கில் சென்னை லயோலா கல்லூரியும், திண்டுக்கல் காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை 25-16, 25-21 புள்ளிக்கணக்கில் பிஷப் ஹீபர் கல்லூரியும், ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரியை 25-14, 25-17 புள்ளிக்கணக்கில் ஜமால் முகமது கல்லூரியும், 25-08, 25-11 புள்ளிக்கணக்கில் திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரியும் வென்றன.
லீக் போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் சென்னை லயோலா, திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரி, திருச்சி ஜமால் முகமது, பிஷப் ஹீபர் கல்லூரி ஆகிய 4 அணிகள் அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. திங்கள்கிழமை காலை அரையிறுதியும், மாலையில் இறுதிப் போட்டி, பரிசளிப்பு நடைபெறுகிறது.